திங்கள், 2 அக்டோபர், 2017

குர்து மலைகள்


பெண் கொரில்லாக்கள்
ஏந்தியிருக்கும் கொடியில்
புன்னகைக்கும் சூரியனின் ஒளி
அக்ரா நகரெங்கும் பிரகாசிக்க
ஜூடி மலையிலிருந்து
மிக நெருக்கமாகவே கேட்கிறது
சுதந்திரத்தை அறிவிக்கும்
குர்துச் சிறுவனின் குரல்

போர்க்களத்தில் மாண்டுபோன கணவனுக்காக
யூப்ரட் நதியிருகே
ஒலீவ மரம்போல்
காத்திருக்கும் பெண் ஒருத்தி
இனி அவன் கல்லறைக்கு
கண்ணீருடன் செல்லாள்

ஓய்வற்ற இக்ரிஸ் நதிபோல
தலைமுறை தோறும்
விடுதலை கனவை சுமந்து
சுதந்திரத்தை வென்ற
உம் இருதயங்களில் பூத்திருக்கும்
பிரிட்டில்லா மலர்களின் வாசனையை
நான் நுகர்கிறேன்

குருதி ஊறிய
குர்து மலைகளே
உமது தேசம் போல்
எமது தேசமும் ஒர்நாள் விடியும்
எமது கைகளிலும் கொடி அசையும்
கோணமலையிலிருந்து உமக்குக் கேட்கும்
எமது சுதந்திரத்தை அறிவிக்கும்
ஈழச் சிறுவரின் குரல்

லினுஸ் மலர்களை அணைப்பதைப்போல
எமது கொடியினை ஏந்தி
எம் கனவை உம் விழிகளிலும்
எம் தாகத்தை உம் இருதயத்திலும்
சுமந்த மலைகளே
இறுக்கமாகப் பற்றுகிறோம்
எம் நிலத்தின் விடுதலையை
எதிர்பார்த்திருக்கும் உமது தோள்களை.

ஒரு போராளியின்
இறுதிப் பார்வைபோல
திடமானது நம் சுதந்திரம்
கொரில்லாக்களைப் போன்ற குர்து மலைகள்
உமக்குத் தோழமை
நீரோ எமக்குத் தோழமை
குர்து மலைகளைப் போலவே
புனிதமானது நமது விடுதலை.

●தீபச்செல்வன்

நன்றி: குளோபல் தமிழ் செய்திகள்
 
Copyright 2009 ஒளி தீபம். Powered by Blogger Blogger Templates create by Deluxe Templates. WP by Masterplan